Published : 29 Apr 2020 02:55 PM
Last Updated : 29 Apr 2020 02:55 PM

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி; காயம் 15

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (புதன்கிழமை) ஆப்கன் படைகள் முகாமிட்டுத் தங்கியுள்ள இடத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், ரம்ஜான் மாதத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தவில்லை. எங்கள் வீரர்கள் இந்தத் தாக்குலின் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சைபிமுல்லா முஜாகிதின் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இத்தகைய தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x