

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான வேலை இழப்பை தென்கொரியா எதிர்கொண்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து யோன்ஹாப் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், “தென்கொரியா கடந்த 2009 ஆம் ஆண்டு பெரும் வேலை இழப்பைச் சந்தித்தது. அக்காலகட்டத்தில் சுமார் 2,40,000 வேலைகள் பறிபோயின.
இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலையிழப்பு தென்கொரியாவுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை தென்கொரியா சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் தென்கொரியாவில் 1,95,000 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிக மற்றும் தினக் கூலிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கணினித் துறை சார்ந்த வேலை அல்லாது மற்ற துறைகளில் வேலை இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இதுவரை கரோனா வைரஸால் 10,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் வேலையாட்கள் பணிக்கு வர முடியாத காரணத்தினால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக ஆட் குறைப்பு மற்றும் வருமானம் பிடிப்பு போன்ற நடவடிக்கைகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.