

கரோனா வைரஸால் அதிக உயிர் பலி ஏற்பட்டிருக்கும் இத்தாலியில் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் இத்தாலியின் தினசரி வாழ்வியல் முறையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க இத்தாலியில் ஊரடங்கை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பை புதன்கிழமை மாலை இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே கூறும்போது, “ நாம் 13,000க்கும் அதிகமான உயிர்களை இழந்துவிட்டோம். இந்தக் காயத்தை எப்போதும் குணமாக்க இயலாது. எனவே தற்போதுள்ள சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் எண்ணத்தில் இல்லை. இதன் காரணமாக ஏப்ரல் 13 ஆம் தேதி வரை இத்தாலியில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கிறேன்.
ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகான அடுத்த இரண்டாம் கட்டத்தில் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படலாம். இதனைத் தொடர்ந்து வரும் மூன்றாவது கட்டம் புனரமைக்கப்பட்ட சமூகம் மற்றும் பொருளாதார வாழ்க்கையின் மறு தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.