

இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்க உள்ளது. கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 10,779 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 24 மணிநேரத்தில் 756 பேர் பலியாகினர். தொடர்ந்து இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் பிப்ரவரி 21 ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பள்ளிக்கூடம் முதல் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கலாம் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எதுவரை நீடிக்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 33,000 பேர் பலியாகியுள்ளனர்.