

ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அந்நாட்டில் இயங்கும் கோரசன் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோரசன் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “ஈரானில் கோவிட் (கரோனா வைரஸ் ) பாதிப்புக்கு 6 வயதுக் குழந்தை பலியானது.
ஈரானில் கோவிட் காய்ச்சலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பலியாகினர். இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,932 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 24,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 பேர் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் 65 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகமாக கரோனா வைரஸால் இறப்பைச் சந்திக்கிறார்கள் என்று ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.