இந்தியாவில்தான் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்கள் அதிகம்: சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில்தான் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்கள் அதிகம்: சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Updated on
1 min read

புகையில்லா புகையிலையால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்று பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந் துள்ளது.

புகையிலையை பயன்படுத்து வது என்றால் பெரும்பாலும் சிகரெட், பீடி போன்ற புகையை வெளிப்படுத்தும் பொருட்கள்தான் நமது நினைவுக்கு வரும். ஆனால் வாயில்போட்டு மெல்லக்கூடிய வகையில் உள்ள புகையிலைப் பொருட்கள் ஏராளமான இந்தியர் களின் உயிரைக் குடித்து வருகிறது.

சிகரெட்டைவிட இந்த வகை மெல்லும் புகையிலையில்தான் நிக்கோடின் உள்ளிட்ட கேடு விளைவுக்கும் பொருட்கள் அதிகம். இவை மெதுவாக ரத்தத்தில் கலந்து அதிக நேரம் உடலில் தங்கியிருக்கும். எனவே இந்த வகை மெல்லும் புகையிலை வெளியே தெரியாமலேயே பலரது உயிரை பறித்து வருகிறது.

மெல்லும் புகையிலையால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இந்தியா குறித்த அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் 4 பேர் புகையில்லா புகை யிலை பயன்பாட்டில் உயிரிழந் தால், அதில் 3 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

வாயில் போட்டு புகை யிலை மெல்லும் பழக்கம் உடைய வர்களில் 85 சதவீதம் பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். இந்த கேடு விளைவுக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 74 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். மொத்தம் 113 நாடுகளில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 2010-ம் ஆண்டில் மட்டும் புகையிலை மெல்லும் பழக்கத்தால் வாய் புற்றுநோய் ஏற்பட்டு 62 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதே பழக்கத்தால் இதயம், வயிறு உட்பட பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு 2 லட்சம் பேர் இறந் துள்ளனர்.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள பிரிட்டனின் யார்க் பல்கலைக்கழக விரிவுரை யாளர் கம்ரான் சித்திக் கூறியது: சிகரெட் போன்ற புகையை வெளிப்படுத்தும் புகையிலை யைவிட, வாயில் போட்டு மெல்லுவது, வாயில் ஒதுக்குவது, மூக்கின் மூலமாக புகையிலை உறிஞ்சுவது என புகையிலையை பயன்படுத்துவது பல மடங்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இது பலருக்கு தெரிவதில்லை. எனவே சர்வதேச அளவில் இந்த புகையில்லா புகையிலை பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற புகையிலையை தயாரிப்பையும், பயன்பாட்டையும் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in