

சிரியாவில் தொடரும் மனிதாபிமான நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வர உதவி புரியுமாறு பிரெஞ்சு மற்றும் ஜெர்மனிக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி அரசு சார்பில், “இட்லிப் பகுதியில் சிரிய - ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். அங்கு நிகழும் மனிதாபிமான நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவர பிரெஞ்சு மற்றும் ஜெர்மனி நாடுகள் உதவ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அதிபர் எர்டோகன் அறிவுறுத்தியுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
இதற்கிடையில் அரசுப் படைகள் பொதுமக்கள் பகுதிகள் மற்றும் முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.