

லெபனானில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே லெபனான் அரசை எதிர்த்து அந்நாட்டில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நாடளுமன்றத்தில் லெபனான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத வண்ணம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் 350க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, “எங்களில் அவர்கள் மீது சிறு நம்பிக்கை கூட இல்லை. நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கவில்லை. நாங்கள் 40 வருடங்களாக சோர்வடைந்து விட்டோம்” என்றார்.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அந்நாட்டில் இயங்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்த நிலையில் எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் லெபனான் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.