

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் 14 வயது கிறிஸ்தவ சிறுமி மதம் மாற்றி திருமணம் செய்தாலும் அது ஷரியத் சட்டத்தின் படி செல்லுபடியாகும், அந்த சிறுமியின் முதல் மாதவிடாய் சுழற்சியாக இருந்தும் அது செல்லுபடிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிந்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி. இவர்களின் மகள் ஹுமா(14). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் ஹுமாவை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தன. வழக்கைக் கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் இக்பால் கல்ஹூரோ, இர்சத் அலி ஆகியோர் முஸ்லிம்கள் ஷரியத் சட்டப்பட்டி இந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறித் தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் தபாசும் யூசுப் நிருபர்களிடம் கூறுகையில், " இந்த திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு சிந்து மாநில குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது. 18வயதுக்கு கீழ்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமிக்கு முதல் மாதவிடாய் சுழற்ச்சி வந்திருந்தாலும் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சிறுமியின் வயதை ஆய்வு செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போலீஸாரோ அப்துல் ஜப்பாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.
சிறுமியின் வயதை உறுதி செய்யும்வரை சிறுமியை கணவருடன் சேர்க்கக் கூடாது எனக் கோரியுள்ளோம். ஆனால், போலீஸார் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துவிடுவார்கள் என சிறுமியின் பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருப்பின் சிறுமியின் பெற்றோர் தேவாலயம், பள்ளி ஆகியவற்றில் வயது குறித்த சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
தவறவிடாதீர்..