

பிரேசிலின் அமேசான் மழை காடுகளில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட காடழிப்பு 2019 -ல் நடத்தப்பட்ட காடழிப்பைவிட அதிகம் என்று அந்நாட்டில் இயங்கும் சுற்றுச் சூழல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ’National Institute for Space Research’ வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, “ அமேசான் மழைக் காடுகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் தீவிரமான காடழிப்பு வேலை நடத்தப்பட்டுள்ளது.சுமார் 280 சதுர கிலோ மீட்டருக்கு அதிகமான காடுகள் கடந்த மாதத்தில் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ல் நடத்தப்பட்ட காடழிப்பைவிட அதிகம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி இருக்கிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசாம் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை பிரேசில் அதிபர் போல்சினோரா நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .
40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.