

விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்காக பிற நாட்டிற்கு அனுப்ப இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. இதில் விமானத்தில் பயணித்த 176 பேர் பலியாகினர்.. பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவரகள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் தெரிவித்தது.
இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து இத்தாக்குதலில் உள் நோக்கம் ஏதும் இல்லை என்றும் மனிதத் தவறால் இந்த விமான விபத்து நடந்துள்ளதாக அந்நாடு ஒப்புக் கொண்டது. மேலும் இந்த தவறுக்கு காரணமானவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்தார்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டி தொடர்ந்து ஈரானே வைத்திருப்பதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரானின் மூத்த விமானப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ நாங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளான கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் பெட்டியை ஆய்வுக்காக பிற நாட்டிற்கு அனுப்பும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை” என்றார்.