

தங்கள் போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
உக்ரைன் விமானம் ஈரானின் ஏவுகணையால் தவறுதலாகச் சுடப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டதையடுத்து நாட்டில் பல இடங்களில் ஈரான் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது ஜெர்மனியும் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் மரியா கூறும்போது, “ தங்கள் போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும். ஈரான் மக்களுக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த எல்லா உரிமையும் உண்டு. ஈரான் மக்கள் நடத்தும் போராட்டம் சுதந்திரமானதாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.
தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.
இந்நிலையில் ஈரான் அரசின் செயலைக் கண்டித்து டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.