உக்ரைன் விமானம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உள்நோக்கம் அற்றது: ஆஸி.பிரதமர்

உக்ரைன் விமானம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உள்நோக்கம் அற்றது: ஆஸி.பிரதமர்
Updated on
1 min read

உக்ரைன் விமானம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உள்நோக்கம் அற்றது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. இவ்விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் விமான விபத்து குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “எங்கள் நாடு உட்பட பல்வேறு உளவுத் தரப்புப் பிரிவினர் தரப்பிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், ஈரான் இதனை உள்நோக்கம் கொண்டு செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in