

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பால்க் மாகாணத்தின் தாவோலாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் 10 பலியாகினர். பலர் காயமடைந்தனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே உடன்பாடு எட்டியதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மீது தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.