ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் வடக்குப் பகுதியில் உள்ள ஜவுஸ்சன் மாகாணத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆப்கனில் கோஸ்ட் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். மேலும் பால்க் மாகாணத்தில் நடந்த மற்றுமொரு குண்டுவெடிப்பில் 5 போலீஸார் உட்பட17 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் உடன்பாடு எட்டியதால் தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in