இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் அமைப்பு அறிக்கை

இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் அமைப்பு அறிக்கை
Updated on
1 min read

இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயகத்தினருடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான வன்கொடுமை இன்றளவும் தொடர்வதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'ஃப்ரீடம் ஃப்ரம் டார்டர்' (Freedom from Torture) என்ற அந்த அமைப்பானது வன்கொடுமைகளில் இருந்து மீண்டு பிரிட்டனில் அடைக்கலம் தேடி நபர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

அந்நிறுவனமானது களங்கமடைந்த அமைதி ('Tainted Peace') என்ற பெயரில் தயாரித்துள்ள புதிய அறிக்கையில், கடைசியாக இலங்கையில் இருந்து மீண்ட பாதிக்கப்பட்ட 148 பேரில் பலரும் சகிக்க முடியாத வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது.

அதாவது, இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 100% பேர் கடுமையான அடி, உதை தாக்குதலுக்கு உள்ளாகினர், 78% பேர் தீக்காயங்களுக்குள்ளாகினர், 71% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர், 38% பேர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர், 70% பேர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்தலை சந்திக்கவிருக்கும் இலங்கை அவசர பணியாக எடுத்துக் கொள்ள வேண்டியது, "ராணுவத்தினர் மற்றும் போலீஸாரால் நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதே ஆகும்" என வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இலங்கையில் அமையும் புதிய அரசானது ராணுவம், போலீஸ், உளவுத்துறையினர் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தும் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு தருணங்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கூட வன்கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கொடுமைகளில் இருந்து மீண்ட 148 பேரில் 139 தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஃப்ரீடம் ஃப்ரம் டார்டர்' (Freedom from Torture) அமைப்பின் கொள்கை ஆலோசகர் சோன்யா ஸ்கீட்ஸ் கூறும்போது, "கைதிகளை வன்கொடுமை செய்யும் பழக்கமானது இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையில் வேரூன்றியிருக்கிறது என்பதை மறுப்பதற்கல்ல.

இந்நிலையில், அடுத்த வாரம் அதிபருடன் புதிய ஆட்சியில் இணையவிருக்கும் அரசானது, பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு இத்தகைய வன்கொடுமைகளுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அச்சமின்றி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in