இராக் போராட்டம்; 300க்கும் மேற்பட்டோர் பலி

இராக் போராட்டம்; 300க்கும் மேற்பட்டோர் பலி
Updated on
1 min read

இராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இராக் தலை நகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது இராக் பாதுகாப்புப் படையினர் திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை ஷியா மதகுருமார்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் இராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இராக் மனித உரிமை ஆணையம், “இராக்கில் அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பஸ்ரா நகரில் நடந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேலாக இராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகினர். 15,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவரகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

இந்நிலையில் இராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in