

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 18 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், “ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடந்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் இந்தத் தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வார்டார்க் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஆப்கன் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பலத்த ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் தலிபான் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தலிபான்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.