ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு டி காப்ரியோ ஆதரவு; குவியும் பாராட்டு

ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு டி காப்ரியோ ஆதரவு; குவியும் பாராட்டு
Updated on
1 min read

ஈஷா யோகா மையம் சார்பாக ஜக்கி வாசுதேவ் தொடங்கிய 'ரேலி ஃபார் ரிவர்ஸ்' (Rally for Rivers) என்ற நதிகளை மீட்கும் திட்டத்திற்கு ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி காப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவிரியில் கடந்த 50 ஆண்டுகளில், வழக்கமாக வரும் நீர் அளவை விட தற்போது 40 சதவீதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், தமிழகத்தில் காவிரி வடிநிலமாக உள்ள 18 மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பசுமைப் பரப்பில் 87 சதவீதம் இப்போது இல்லை. இந்த பசுமைப் பரப்பை மீட்டெடுத்து, காவிரியை மீண்டும் வற்றாத ஜீவநதியாக மாற்றும் நோக்கத்தில், ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

இந்த இயக்கம் மூலம், காவிரி வடிநிலப் பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவின் இவ்வியக்கத்தில் நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி காப்ரியோ ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளங்களில், ''இந்தியாவில் உள்ள பல நதிகள் அழியும் தருவாயில் உள்ளன. நதிகளை மீட்கப் போராடி வரும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் ஒன்றிணைவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சூழியல் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டி காப்ரியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பிபிசி செய்தித் தளத்தில் வெளிவந்த தமிழகத்தில் நிலவும் தண்ணீர் வறட்சி பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்ட லியானார்டோ டிகாப்ரியோ, ‘மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும்’ என்ற வரியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in