Published : 19 Sep 2019 01:32 PM
Last Updated : 19 Sep 2019 01:32 PM

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து பஜ்ஹோக் செய்தி நிறுவனம் , ”ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கவ்லத் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை குண்டு ஒன்று வெடித்தது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆப்கனில் செவ்வாய்க்கிழமை அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் பலியாகினர். மேலும் காபூலில் அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

புதன்கிழமையும் ஆப்கனில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. ஆப்கனில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் தலிபான்களால் நடத்தப்பட்டு வருகின்றது.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் ஆப்கனில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x