அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் இளைஞர்கள் துப்பாக்கிச் சண்டை: 9 பேர் பலி

அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் இளைஞர்கள் துப்பாக்கிச் சண்டை: 9 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் பரபரப்பான சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்த சில இளைஞர்கள் கும்பல் துப்பாக்கியால் சுட்டு மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் சுட்டுக் கொண்டதில் 9 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ என்ற இடத்தில் பரபரப்பான நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் கையில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டுக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.

வாகோ என்ற இடத்தில் அமைந்துள்ள டிவின் பீக்ஸ் என்ற உணவகத்தின் வெளியே இந்த சம்பவம் நடந்தது.

இதனால் அந்த இடமே பதற்றத்தில் உறைந்தது. சாலையில் இருந்த மக்கள் அச்சத்தில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறினர்.

இளைஞர் கும்பல் மோதலில் ஈடுபட்டதில் 9 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் இதுவரை இப்படி ஒரு மோதல் நடந்ததில்லை என்று சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தகவலறிந்த டெக்சாஸ் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாகோ போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இரு பிரிவினரிடையே பைக் ரேஸ் நடைபெற்றதாகவும், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, குறைந்தது 100 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்தபோது, டிவின் பீக்ஸ் உணவகத்தில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் சுமார் 200 பேர் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை டெக்சாஸ் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in