போகோ ஹராம் அட்டூழியத்தால் 8 லட்சம் குழந்தைகள் தவிப்பு: யுனிசெப் கவலை

போகோ ஹராம் அட்டூழியத்தால் 8 லட்சம் குழந்தைகள் தவிப்பு: யுனிசெப் கவலை
Updated on
1 min read

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தும் அட்டூழியத்தால் கடந்த 2007-லிருந்து சுமார் 8 லட்சம் குழந்தைகள் வீடின்றி தவிப்பதாக யூனிசெப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யூனிசெப் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், "வடகிழக்கு நைஜீரியாவில் சுமார் 8 லட்சம் குழந்தைகள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அவர்கள் வீடின்றி குடும்ப உறவுகளை இழந்து தவிக்கின்றனர். பல முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கைவிடப்பட்ட அல்லது குடும்பத்தை இழந்து நிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. போகோ ஹராம் நடத்தும் தாக்குதல்களின் விளைவாக இந்த அபாயம் நடந்துள்ளது.

இவர்களது சண்டைகளில் குழந்தைகள் திட்டமிட்ட இலக்குகள் ஆகின்றனர். பாலியல் தொந்தரவுகள், கட்டாயத் திருமணம், கடத்தல்கள் மற்றும் கொலைக்குள்ளாகின்றனர்.

பல குழந்தைகள் கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்களாகிவிட்டனர். பயங்கர ஆயுதங்களை உபயோகிக்க பழக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த 2007-லிருந்து நைஜீரியாவில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்திலிருந்து 10.5 லட்சமாக அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது" என்று அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கு இதுவரை நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்துள்ளனர். நைஜீரியாவின் நகரங்களை ஆக்கிரமிக்கும் இவர்கள் அங்கு 'கலிபெத்' எனும் தனி இஸ்லாமிய நாடு அமைக்க இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in