அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்த அல் ஷபாப் அழைப்பு

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்த அல் ஷபாப் அழைப்பு
Updated on
1 min read

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள வணிக வளாகங்கள் மீது 'ஓநாய்த் தாக்குதல்' நடத்த சோமாலிய அல்-ஷபாப் தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

''மினியோஸ்டாவில் உள்ள மால் ஆஃப் அமெரிக்கா, கனடாவில் உள்ள வெஸ்ட் எட்மாண்டன், பிரிட்டனில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் ஆகிய வணிக வளாகங்களின் மீது ஓநாய்த் தாக்குதல் நடத்த இஸ்லாமிய சகோதரர்கள் தயாராக வேண்டும்" என்று அழைப்பு விடுக்கும் விதமான 76 நிமிட காட்சிகள் கொண்ட வீடியோப் பதிவை சோமாலியா நாட்டின் அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது.

வீடியோவில் முகமுடி அணிந்த நபர் கூறும்போது, "கென்யாவிலும் மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ல் கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இணையான ஒரு தாக்குதலை நடத்த அழைப்பு விடுக்கும் விதமாக இந்த வீடியோ அதே இயக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து அமெரிக்காவின் மிகப் பெரிய வணிக வளாகமான 'மினியோஸ்டாவில் உள்ள மால் ஆஃப் அமெரிக்கா'-வில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க புலனாய்வு நிறுவனம் இந்த வீடியோ குறித்து விசாரித்து வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in