மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது பாக். உயர் நீதிமன்றம்

மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது பாக். உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு ஆட்கடத்தல் வழக்கில் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்கியுள்ளது.

மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி மீதான ஆட்கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை மறுவிசாரணை செய்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், லக்விக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் லக்வி மீது சுமத்தப்பட்டிருக்கும் மற்றுமொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் வரை லக்வியின் சிறைவாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் அரசு விதித்த தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்புக் காவல் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.10 லட்சம் பிணைத் தொகையை லக்வி தரப்பினர் நீதிமன்றத்தில் செலுத்தியதை அடுத்து அவர் விடுவிக்கப்படவிருந்த நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து ஜகியுர் லக்விக்கு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி மீண்டும் ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், லக்வியை தடுப்புக்காவலில் பாகிஸ்தான் அரசு அடைத்தது.

இருப்பினும், பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் நீட்டிப்பை எதிர்த்து ஜகியுர் லக்வியின் தரப்பு மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து, தடுப்புக்காவலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைக் கடுமையாக ஆட்சேபித்த இந்தியா, கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பசித்தை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததால், லக்வி சிறையிலிருந்து விடுவிக்கப்படும் முன்பு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை மீண்டும் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பாகிஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் லக்வியின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அவசரம் காட்டாமல் மீண்டும் விசாரித்து தகுதியான முடிவை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in