

பெங்களூரு: கானா நாட்டில் அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்றதாக கர்நாடகாவை சேர்ந்த பழங்குடிகள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் வாழும் ஹக்கி பிக்கி பழங்குடியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அங்கு அவர்கள் அரிய வகை மூலிகைகளை விற்பனை செய்துவருவதாக தெரிகிறது. இந்நிலையில் கானா நாட்டில் அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்பனை செய்ததாக ஹக்கி பிக்கி பழங்குடியினர் 26 பேர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
இதனால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஹக்கி பிக்கி பழங்குடியின சங்க தலைவர் புனித் குமார் கூறுகையில், ''கானாவில் கைது செய்யப்பட்ட விவகாரம் எனக்கு அங்குள்ள ஹக்கி பிக்கி சமூகத்தினர் மூலம் தெரியவந்தது.
தற்போது மேற்கு கானா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 பேரையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தூதரக அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.