

ஈரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் உண்மையான முகத்தை காண்பிக்கிறார் என்று சாடியுள்ளார்.
இது குறித்து தெஹ்ரானில் அவர் ராணுவ கமாண்டர்களிடையே நிகழ்த்திய உரையில் கூறியதாவது:
இந்த கனவானுக்கு (ட்ரம்ப்) நாம் நன்றியுடையவர்களாக இருப்போம்... ஏனெனில் அமெரிக்காவின் உண்மையான முகத்தை இவர் காட்டிவிட்டார். நாம் 30 ஆண்டுகளாக என்ன கூறிவந்தோம்... அமெரிக்காவின் ஆளும் அமைப்பில் அரசியல், பொருளாதார, அற, சமூக ஊழல் நிலவி வருகிறது என்று கூறினோம்-- இப்போது நாம் கூறிவந்தது உண்மையே என்பதையே ட்ரம்ப் நிரூபித்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரமும் சரி, வெற்றிக்குப் பிறகான நடவடிக்கைகளிலும் சரி அவர் அமெரிக்காவின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார்.
அமெரிக்க விமான நிலையத்தில் 5 வயது ஈரான் பையன் கையில் விலங்கு மாட்டியதிலிருந்தே அமெரிக்க மனித உரிமைகளின் உண்மையான அர்த்தத்தை ட்ரம்ப் காட்டிவிட்டார்.
ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக கூறுகிறார் ட்ரம்ப், மேலும் ஒபாமா அளித்த சலுகைகளுக்கு நாம் நன்றியுடன் இல்லை என்கிறார் ட்ரம்ப், ஆனால் உண்மையில் ஒபாமாதான் ஈரானை முடக்கும் பொருளாதார, ராணுவ தடைகளைப் பிறப்பித்தார், ஒபாமாவின் செயல்களால்தான் இராக், சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் உருவானது, ஆம், ஐஎஸ் உருவாக ஒபாமாவின் சில நடவடிக்கைகளே உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.