

லண்டனில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் அழையா விருந்தாளியாக விஜய் மல்லையா வர, அங்கிருந்த பிரிட்டனுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
சுஹெல் சேத் மற்றும் பத்திரிகை நிருபர் சன்னி சென் ஆகியோரின் “Mantras for Success: India’s Greatest CEOs Tell You How to Win” என்ற நூல் வெளியீட்டு விழா லண்டன் ஸ்கூல் ஆஃப் இகானமிக்சில் உள்ள தெற்காசிய மையத்தில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், அவ்வகையில் அழையா விருந்தாளியாக ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் மல்லையா தனது மகளுடன் வந்து அமர்ந்தார். மல்லையாவைப் பார்த்தவுடன் பிரிட்டனுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா அரங்கை விட்டு வெளியேறினார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “மல்லையாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக மல்லையா அவரது மகளுடன் வந்து அரங்கில் அமர்ந்தார். அவரைப் பார்த்தவுடன் இந்திய தூதர் அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார். இது ஒரு பொது நிகழ்ச்சி, சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது” என்றார்.