துருக்கியில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

துருக்கியில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு
Updated on
1 min read

விமானத்தை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை துருக்கி பாதுகாப்புப் படையினர் நேற்று முறியடித்தனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் ரஷ்யாவின் சோச்சி நகருக்கு விமானத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து எப்-16 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது பயணிகளில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறினார். பின்னர் விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தார். அப்போது துருக்கி வான் எல்லையில் விமானம் பறந்து கொண்டிருந்தது. கடத்தல் முயற்சி தொடர்பாக இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்துக்குள் நுழைந்த பாதுகாப்புப் படையினர், விமானத்தை கடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் நபரை பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் ஆயுதம் ஏதுமில்லை. விமானத்தில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in