அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணி உட்பட 5 பேர் பலி
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிகாகோ நகர போலீஸ் தரப்பில், "சிகாகோ நகரின் தென் பகுதியில் உள்ள உணவு விடுதியில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.
பின்னர் அதே பகுதியின் வெளிப்புறத்தில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் இருவர் சகோதரர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
