

இரண்டாம் உலகப் போரின் போது மலேரியாவை பரப்பும் கொசுக்களை அதிகளவில் உற் பத்தி செய்து எதிரிகளின் நாடுகளில் விட்டு தாக்குதல் நடத்த நாஜிக்கள் திட்டமிட்டிருந்தனர் என்று வரலாற்று ஆய்வாளர் கிளாஸ் ரெய்ன்ஹார்ட் கூறியுள்ளார்.
நாஜிக்கள் கைதிகளை அடைத்து வைத்திருந்த டாசவ் முகாம் அருகே உள்ள எஸ்.எஸ். பூச்சியியல் நிறுவனத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது. டுபின்ஜென் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் கிளாஸ் ரெய்ன்ஹார்ட், ஹிட்லரின் நாஜி படை ஆட்சியிலிருந்த ஜெர் மனியில் நடைபெற்ற போர் தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவர் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாவது:
இரண்டாம் உலகப் போரின்போது, உணவுப் பொருள்களை சேதப்படுத்தும் பூச்சிகளை தடுப்பது, மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் எஸ்.எஸ். பூச்சியியல் மையம் ஈடுபட்டு வந்தது. போர் தீவிரமடைந்த நிலையில், இந்த மையத்தில் உயிரியல் ரீதியான போர் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.
மலேரியாவை பரப்பக் கூடிய கொசுக்கள் குறித்து 1944-ம் ஆண்டு இந்த மையத்தில் ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இந்த வகை கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து, எதிரிகள் வசிக்கும் பகுதிகளில் அவற்றை விட்டு நோயை பரப்பி அவர்களை நிலைகுலையச் செய்வது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.