

ஜப்பான் மற்றும் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பை தாமஸ் பாக் சனிக்கிழமை தெரிவித்தார்.
வடகொரியா அதிபர் கிம்முடனான சந்திப்பு குறித்து பெய்ஜிங்கில் தாமஸ் பாக் கூறும்போது,
"கிம்முடனான விவாதம் ஆரோக்கியமான வகையில் அமைந்தது. அடுத்து ஜப்பான் மற்றும் சீனாவில் வரும் வருடங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும்" என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸின் பயணம் குறித்து வடகொரிய அரசு ஊடகம், ”தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வடகொரியா கலந்து கொண்டதற்கு தாமஸ் நன்றி தெரிவித்தார்.
வடகொரியாவின் இந்தச் செயல் அமைதியின் அடையாளமாக அமைந்து என்று அவர் பாராட்டினார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வட கொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதனைத் தொடர்ந்து வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.