

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாதில் தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்ததால், அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்று இரவு இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தும் நவாஸ் எதிர்ப்பாளர்கள் தங்களது போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
தலைமைச் செயலகம் நுழைவு வாயில் உடைப்பு
இந்த நிலையில் இன்று திடீரென்று போராட்டக்காரர்கள் திரண்டு தலைமை செயலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். ராணுவத்தினர் அவர்களை தடுக்க முயன்றபோது அவர்களை மீறி தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலை உடைத்து போராட்டாகாரர்கள் உள்ளே நுழைந்தனர்.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ராணுவ அதிகாரிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க, செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடியுள்ளனர்.
அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்
இதை தவிர, பாகிஸ்தான் அரசு செய்தி தொலைக்காட்சியான பாகிஸ்தான் டிவி வளாகத்தினுள் நுழைந்த 800- க்கும் மேற்பட்ட நவாஸ் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்த கேமரா உள்ளிட்ட உபகரனங்களை உடைத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையை முற்றிலுமாக அவர்கள் சேதப்படுத்தியதால் ஒளிபரப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்த ராணுவத்தினர், தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்கு பாதுகாப்பு அளித்து அங்கிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றினர். இதனை அடுத்து ராணுவ பாதுகாப்புடன், தொலைக்காட்சி நிறுவனம் இயங்க தொடங்கியது.
ஆனால், இதனை இம்ரான் கான் மறுத்துள்ளார். தங்களது ஆதரவாளர்களுக்கு பி- டிவியை தாக்க கட்டளையிடவில்லை என்றும், அங்கு கலவரம் ஈடுபட்டவர்களுக்கு தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தொடர்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் கடுமையாக மோதி கொண்டதால் இஸ்லாமாபாதில் பதற்றம் தொடர்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி, பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14- ஆம் தேதி முதல் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை போராட்டம் முற்றிய நிலையில், போராட்டக்காரகள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்றதால், அவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.