

நேபாளத்தில் புயல் வீசியதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நேபாள ஊடகங்கள், ''நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள மீட்புப் படையினர் தரப்பில், ''தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா மீட்புப் பணிகள் விரைந்து நடக்க ராணுவத்தினர் திரட்டப்பட்டதாகவும் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.