Published : 04 Jul 2025 08:09 AM
Last Updated : 04 Jul 2025 08:09 AM
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார்.
ஆனால், ஹமாஸ் அமைப்பினர் இதை ஏற்றுக்கொள்ளாமல், உண்மையான சண்டை நிறுத்தத்துக்கு இது வழிவகுக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்கிறது.
நிவாரணத்துக்கு காத்திருந்தவர்கள்: காசாவின் முவாசி பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் கூடாரங்களில் தங்கியிருந்த 15 பேர் உயிரிழந்தனர். காசாவில் பள்ளி கட்டிடம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவில் அறக்கட்டளை உதவி மையங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் பெற காத்திருந்த 45 பேரும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர். பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் மொத்தம் 94 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பொதுமக்களுடன் தங்கியிருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
காசாவில் நடைபெற்ற தாக்குதலில் இதுவரை மொத்தம் 57,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT