தாய்லாந்து பிணைக் கைதி உடல் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து பிணைக் கைதி உடல் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

காசா: காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர்.

இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை தெரிவிக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ளனர். இவர்களில் பாதிபேர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என இஸ்ரேல் நம்புகிறது. எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

பிணைக் கைதிகளை வைத்திருக்கும் முஜாகிதீன் படை என்ற பிரிவின் தலைவர் அஸ் அத் அபி ஷரையா என்பவரை இஸ்ரேல் ராணுவம் காசாவில் சமீபத்தில் சுட்டுக் கொன்றது. காசாவின் ரஃபா நகரில் முஜாகிதீன் படை பிரிவினருடன் நடைபெற்ற சண்டையில், ஒரு பிணைக் கைதியின் உடலை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீட்டது. அவர் நட்டாபாங் பின்டா என்பது தெரியவந்துள்ளது. இவர் விவசாய பணிக்காக இஸ்ரேல் சென்றிருந்தார். பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டினரில் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில் 46 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 95 பேர் இறந்ததாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in