பாகிஸ்தானின் தீவிரவாத செயலை பொறுத்துக்கொண்டால் உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்: பலுசிஸ்தான் விடுதலை படை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் கூறியதாவது: பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும்.

சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சிக்கு மையமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. எனவே சர்வதேச சமூகம் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.

இந்தியாவும், சர்வதேச சமூகமும் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மேலும் ரத்தக்களரி ஏற்படும்.

பலூசிஸ்தான் விடுதலையை குறிக்கோளாக வைத்து மட்டுமே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எந்தவொரு அதிகார மையம் அல்லது ஒரு நாட்டின் அழுத்தத்தின் கீழ் செயல்படவில்லை. சுதந்திரமாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறோம்.

51 இடங்​களில் 71 தாக்குதல்: கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 51 இடங்களில் 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளோம். பாகிஸ்தான் ராணுவம், உளவு மையங்கள் மட்டுமின்றி உள்ளூர் காவல் நிலையம், கனிம போக்குவரத்து வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புகளை உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்.

பிஎல்ஏ இயக்கத்தை பொறுத்தவரையில் அது பகடைக்காயோ அல்லது அமைதியான பார்வையாளரோ கிடையாது. அது ஒரு துடிப்பான தீர்க்கமான இயக்கம். இவ்வாறு ஜீயந்த் பலூச் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in