கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு

கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டு அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்டப் பாதுகாப்பை திரும்பப்பெற இருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதனால் இவர்கள் ஒரு மாதத்திற்குள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிஸ்டி நோயம் கூறுகையில், “கடந்த 2022 முதல் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 5,32,000 பேருக்கு வாபஸ் பெறும் உத்தரவு பொருந்தும். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் ஏப்ரல் 24-ம் தேதி அல்லது பெடரல் பதிவாளர் நோட்டீஸ் வெளியான 30 நாட்களுக்கு பிறகு தங்கள் சட்டப் பாதுகாப்பை இழப்பார்கள்” என்றார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் உறுதி அளித்தார். தற்போது அதிபராக அவர் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும்

புலம்பெயரும் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வந்து தங்குவதற்கான சட்டப்பூர்வ வழிகளையும் அவர் அடைத்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in