பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.

ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ட்ரம்ப் கூறுகையில், "இன்று காலை நான் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது" என்றார்.

டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

அவர் தனது முதல் பதவிக் காலத்தில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது. இருவரும் கடந்த 2019 செப்டம்பரில் ஹூஸ்டனிலும், 2020 பிப்ரவரியில் அகமதாபாத்திலும் நடந்த இருவேறு கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றினர்.

2024 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்ற மகத்தான வெற்றிக்கு பிறகு அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in