தாய்லாந்து குகையிலிருந்து 5வது சிறுவன் மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து 5வது சிறுவன் மீட்பு
Updated on
1 min read

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஐந்தாவது சிறுவனையும் மீட்புப் படையினர் இன்று மீட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏபி வெளியிட்ட செய்தியில், "தாய்லாந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து ஐந்தாவது சிறுவன் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய கால்பந்து அணியைச் சார்ந்த  12 சிறுவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார். அப்போது கனமழை பெய்திட அவர்கள் குகையில் சிக்கிக் கொண்டனர்.

தாம் லுவாங் குகையில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கிக் கொண்ட இவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 4 நான்கு  சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் ஐந்தாவது சிறுவன் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டார்.  மீதமுள்ளவர்களை மீட்க மீட்புப் பணி தொடர்ந்து  நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in