ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழை தர மறுக்கும் கனடா அரசு

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழை தர மறுக்கும் கனடா அரசு
Updated on
1 min read

ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கேட்டும் கனடா அரசு தர மறுத்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்த அவர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை தீவிரமாக எழுப்பி வருகிறார்.

மேலும், நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார் வர்மா உட்பட 6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றி வந்த 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்திய அரசு வெளியேற்றியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கனடா அரசிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்டிருந்தனர். ஆனால் அந்தச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கனடா அரசு தர மறுத்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது பல்வேறு வழக்குகள் இந்தியாவில் உள்ளன. அவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மீதான வழக்குகளின் சட்டச் செயல்பாடுகளை முடிப்பதற்கு அவரின் இறப்புச் சான்றிதழ் தேவையாக உள்ளது. இதற்காக கனடா அரசை அணுகினோம். ஆனால் அவர்கள் இறப்புச் சான்றிதழை தர அவர்கள் மறுத்துள்ளனர்.

மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழ் உங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்று அவர்கள் பதில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in