கெடு விதித்த மாணவர்கள்: வங்கதேச தலைமை நீதிபதி பதவி விலகல்!

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசனையும் (Obaidul Hassan) பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் காரணமாக அவர் கடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை அடுத்து, அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்தன. இதனிடையே, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது.

ஹசீனாவை தொடர்ந்து, அந்நாட்டின் நீதிபதிகளையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதாவது, தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்திருக்கிறது. இந்த அரசுடன் கலந்தாலோசிக்காமல் முழு நீதிமன்றக் கூட்டத்தை கூட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. ஒரு மணி நேரம் கெடுவிதிப்பதாக கூறி நீதிமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. போராட்டத்தை அடுத்து தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். இவர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாகக் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in