அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்.4-ல் கமலா ஹாரிஸுடன் விவாதம் நடத்த ட்ரம்ப் சம்மதம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்.4-ல் கமலா ஹாரிஸுடன் விவாதம் நடத்த ட்ரம்ப் சம்மதம்
Updated on
1 min read

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார். ஒபமா உள்ளிட்ட தலைவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றார். இதையடுத்து வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாட்டில் அவர் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

தற்போது அடுத்தகட்ட நகர்வாக கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் தொலைக்காட்சிகள் ஏற்பாடு செய்யும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பர். தங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெறும் இந்த விவாதங்களில் அனல் பறக்கும். இந்த விவாதங்களுக்காகவே அமெரிக்க அதிபர் தேர்தல் பேசப்படுவதுண்டு.

அதன்படி, ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் உடன் டொனால்ட் ட்ரம்ப் விவாதம் நடத்த உள்ளார். செப்டம்பர் 4-ம் தேதி இந்த விவாதம் நடக்கவுள்ளது. இதனை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரம்ப் தனது பதிவில், "ஜோ பைடன் உடன் நடத்திய விவாதத்தில் இருந்த அதே விதிகள்தான் இந்த விவாதத்துக்கும். ஆனால் இந்த முறை அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு முன்பாக, "ஒருவேளை கமலா ஹாரிஸ் இந்த விவாதத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதே தேதியில் பெரிய டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடைபெறும்" என்று அறிவித்திருந்தார். பின்பு அந்தப் பதிவை நீக்கவும் செய்தார்.

முன்னதாக, செப்.17-ம் தேதி விவாதம் நடத்த ஃபாக்ஸ் நியூஸ் திட்டமிட்டிருந்தது. இதற்கு கமலா ஹாரிஸ் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதனால், அவருடன் விவாதம் நடத்த ட்ரம்ப் மறுத்துவிட்டார். தற்போது கமலா ஹாரிஸ்தான் அதிகாரபூர்வ வேட்பாளர் என்பது உறுதியானதை அடுத்து விவாதத்துக்கு ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in