மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எரிவாயு கசிவு: 39 பேர் பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் சுமார் 39 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று அங்கு நடந்துள்ளது.

இதில் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், விமான சேவையில் எந்த இடையூறும் இல்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். வானூர்தி பொறியியல் செயல்பாடு பிரிவில் இருந்து இந்த ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலாங்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

செபாங் விமானப் பொறியியல் பிரிவில் இந்த வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்துள்ளனர். பயணிகளுடன் இந்தப் பிரிவு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத காரணத்தால் இதில் பயணிகள் பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அங்கு பணியில் இருந்த மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 39 பேருக்கும் தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெத்தில் மெர்காப்டன் என்ற ரசாயன கசிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கசிவு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in