Published : 22 Apr 2024 10:33 AM
Last Updated : 22 Apr 2024 10:33 AM

மாலத்தீவில் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

தேர்தலில் வாக்களித்த அதிபர் முகமது முய்சு

மாலே: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது.

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. முன்னதாக, அவர் தனது தேர்தல் வாக்குறுதியில், “மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவம் இருக்ககூடாது. இந்திய ராணுவக்குழுவை இம்மண்ணிலிருந்து வெளியேற்றுவேன்” எனக் கூறியிருந்தார். அடிப்படையில் சீன ஆதரவாளரான முய்சு இந்தியாவுடனான உறவில் மீண்டும் மீண்டும் விரிசல் ஏற்பட்டதைத் தடுக்க ஏதும் செய்யாதவராகவே இருந்து வந்தார்.

இதனிடையே பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களின் இழிவான கருத்துகளை தெரிவித்து விரிசலை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்தது. இதற்கு மாலத்தீவு எதிர்க்கட்சிகளே கண்டனம் தெரிவித்த நிலையில், அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ளவர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இழிவான கருத்துக்கள் குறித்து அரசு அறிந்துள்ளது. அந்தக் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. அது மாலத்தீவு அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.” எனக் கூறி சர்ச்சைகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது.

எதிர்க்கட்சிகளின் அதிருப்தி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதுவரை 86 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்துக் களம் கண்ட மாலத்தீவு ஜனநாயக கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x