ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதல்?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதல்?
Updated on
1 min read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஒரு ஷாப்பிங் சென்டர் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், "ஷாப்பிங் சென்டரில் பலர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவையில் புகார்கள் வந்தன. ஒரு ஒன்பது மாத குழந்தை உட்பட பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது காவல்துறை நடவடிக்கை நடந்து வருகிறது. மக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் செய்தியில், மர்ம நபர் ஒருவர் ஷாப்பிங் சென்டரில் உள்ளவர்களை கத்தியால் குத்தி தாக்கி வருகிறார் என்றும், அவரால் கத்தியால் குத்தப்பட்ட ஒன்பது மாத குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் ஷாப்பிங் சென்டர் விரைந்த போலீஸார், சென்டருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை சுட்டு வீழ்த்தினர் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. எனினும், இந்த தாக்குதல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த பிறகே முழு விவரங்களும் தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in