71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

Published on

மும்பை: 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும். மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

இந்த போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் உலகி அழகியாக அறிவிக்கப்பட்டார். இவர் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு உலகி அழகிப் பட்டம் வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார். 24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் டிகிரி படித்து வருகிறார்.

இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சினி ஷெட்டி என்ற பெண், லெபனான் அழகி யாஸ்மினிடம் தோல்வியடைந்து பாதியிலேயே வெளியேறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in