Published : 23 Oct 2023 12:54 PM
Last Updated : 23 Oct 2023 12:54 PM

தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்:  24 மணி நேரத்தில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் பலி 

காசா: காசாவின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக காசா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜபாலியா அகதிகள் முகாம் அருகில் உள்ள அல் ஷுஹாபா பகுதியில் இருந்த கட்டிடத்தின் மீதான இந்தத் தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மிகவும் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போர் 17 வது நாளை எட்டியுள்ளது.அடுத்தக் கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் தனது துருப்புகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் காசா மீது ஞாயிற்றுக்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டருந்த நிலையில் லெபனானில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இன்று (திங்கள் கிழமை) அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்த விவரங்களைத் தெரிவிக்காமல் தங்களின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "இந்தப் போரில் ஹிஸ்புல்லாக்கள் இணைவார்களேயானால் அது இரண்டாவது லெபனான் போருக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தவறினை செய்கிறார்கள்" என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடப்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ், "ஹிஸ்புல்லாக்கள் மிகவும் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நிலைமையினை மேலும் தீவிரமாக்குகிறார்கள். நாங்கள் நாளுக்கு நாள் அதிகமான தாக்குதல்களைச் சந்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், "இஸ்ரேலும், அமெரிக்காவும் காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நிறுத்தாவிட்டால் அந்தப்பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும் " என்று எச்சரித்துள்ளார்.

இதனிடையே நடைபெற்றுவரும் போர் சூழல் குறித்து அமெரிக்க அதிபர் தனது மேற்கத்திய நட்பு நாடுகளான பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இஸ்ரேலுக்கான தங்களின் ஆதரவையும், தீவிரவாதத்துக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலுக்கான உரிமையை மீண்டும் வலியுறுத்தினர்.

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் அந்தோணி பிலின்கன்,"இந்த நிலைமைய தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு யாரும் இஸ்ரேல் மீதோ, எங்களின் துருப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அவ்வாறு தாக்குதல் அதிகாரித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு உதவிப் பொருள்கள் அடங்கிய 14 லாரிகளின் இரண்டாவது கான்வாய் செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது. இக்கட்டான சூழலில் இருக்கும் காசாவுக்கான இந்த மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று அமெரிக்க அதிபர் பைடனும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பேர் தொடங்கி 15 நாட்களுக்கு பின்னர் முதல் முறையாக உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ராஃபா பகுதி வழியாக சனிக்கிழமை காசாவுக்கு சென்றன.

காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 220 இஸ்ரேலியர்கள் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாபகுதியில் இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x