

லண்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிகழ்வுகள் குறித்து பாப் பாடகர் மடோனா தனது இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி கண்கலங்கி பேசினார். அமெரிக்காவின் முன்னணி பாப் பாடகராக இருப்பவர் மடோனா. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 64 வயதாகும் இவர், சமீபத்தில் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது முழுமையாக அதிலிருந்து மீண்டும் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை (அக்.18) அன்று இசை நிகழ்ச்சியின் இடையே பாடுவதை நிறுத்திய மடோனா ஹமாஸ் - இஸ்ரேல் போர் குறித்து கண் கலங்கியபடி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேடையில் மடோனா பேசும்போது, “இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே நடந்து கொண்டிருப்பவை இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. சமூக வலைதளங்களை திறந்தாலே வாந்தி எடுக்க விரும்புகிறேன். குழந்தைகள் கடத்தப்பட்டு, தலை கொய்யப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் பார்க்கிறேன். மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் இப்படி குரூரமானவர்களாக இருக்கிறார்கள்? இது எனக்கு பயமுறுத்துகிறது.
நாம் அனைவரும் மெழுகுவர்த்தி போன்றவர்கள். நம்மால் உலகத்துக்கு வெளிச்சம் தரமுடியும். போதுமான வெளிச்சத்தை நாம் கொடுத்தால், பெருந்தன்மை மற்றும் ஒற்றுமையின் கூட்டு மனசாட்சியில் மாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளோ, சட்டங்களோ, கொடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட நிலங்களோ அல்ல. நாமும், நமது மனசாட்சியுமே இந்த உலகை மாற்ற முடியும்” என்று மடோனா பேசினார்.
இஸ்ரேல் - ஹாமாஸ் போர் 13-வது நாளை எட்டியுள்ள நிலையில் இரு தரப்பிலும் சேர்த்து உயிரிழப்பு 5000-ஐ கடந்துள்ளது. காசாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.