

நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று (டிச.14) மாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர், இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் நடந்த யூத மத பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், மற்றொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலத்தின் கீழ் ஒரு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வெடிமருந்து பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “ இது அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரமளிக்கும் நிகழ்வு. பாதிக்கப்பட்டவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியருடன் பேசினேன். பொதுமக்கள் காவல்துறை வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும்” என்றார்
நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ் தனது அறிக்கையில், “போண்டியிலிருந்து வெளிவரும் தகவல்கள் மற்றும் படங்கள் மிகுந்த துயரமளிக்கின்றன. காவல்துறை மற்றும் அவசர சேவைகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.” என்றார்.