இன்று என்ன? - கணையாழி தொடங்கிய கஸ்தூரிரங்கன்

இன்று என்ன? - கணையாழி தொடங்கிய கஸ்தூரிரங்கன்

Published on

தமிழ் இதழாளர், எழுத்தாளர், புகழ்பெற்ற இலக்கிய இதழான கணையாழியை நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் களத்தூரில் 1933 ஜனவரி 10-ம் தேதி பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

புதுக்கவிதை மீது தீராத ஆர்வம் இருந்ததால் எழுத்து என்ற இதழில் இவரது கவிதைகள் வெளிவந்தன. 1961 முதல் 1981-ம் ஆண்டு வரை டெல்லியில் வெளிவந்த நியுயார்க் டைம்ஸ் இதழின் நிருபராக பணியாற்றினார்.

அப்போது 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனப் போர் குறித்து இவர் எழுதிய செய்திக்குறிப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. 1981 முதல் 91 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகவும், காந்தி மிஷனின் செயலாளராகவும் பணியாற்றினார்.

தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ். ஜெகன்னாதன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் உதவியுடன் கணையாழி இதழை தொடங்கினார். தனது நண்பன் தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கணையாழியில் குறுநாவல் போட்டிகளை கஸ்தூரிரங்கன் நடத்தினார். 2011-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in